மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு இடையிலான வன்முறை சம்பவம் குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை கோரியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த 5 பேரும், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, பாஜக தேசியச் செயலர் கைலாஷ் விஜய்வார்கியா தெரிவிக்கையில்,
"மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளார். மத்திய அரசு இதை நிச்சயம் முக்கியமான விஷயமாக கையிலெடுக்கும். இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் நிறைய கோபம் உள்ளது" என்றார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த கொடியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக தெரிகிறது. இதுவே, இரு கட்சியினருக்கு இடையே வன்முறையாக மாறியதாக தெரிகிறது.