சங்ரூர்: பஞ்சாபில் பயன்படுத்தப்படாத 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் 110 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டு சிறுவன் பதேவீர் சிங்கை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காலை 5 மணியளவில் மீட்டனர்.
உடனடியாக சிறுவன் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
7 அங்குலம் சுற்றளவு கொண்ட 150 அடி ஆழ ஆழ்துளையில் 125 அடியில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், சங்ரூர் அருகே பகவான்புரா கிராமத்தை சேர்ந்த பதேவீர் சிங் என்ற 2 வயது ஆண் குழந்தை கடந்த வியாழக்கிழமை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் இருந்த 150 அடி ஆழத்தில் திறந்தநிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
தொடர்ந்து 110 மணி நேரமாக அந்தக் குழந்தையை மீட்க மாவட்ட நிர்வாகமும், பல்வேறு மீட்புக்குழுவினரும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை, அந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து, பல்வேறு தரப்பினரும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் திறந்த நிலையிலுள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுத்து அவற்றை மூடி விட அனைத்து துணை ஆணையர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான அறிக்கையை 24 மணிநேரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் உத்தரவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.