ஹைதராபாத்: ஆந்திர துணை முதல்வர் ஆவார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர அரசில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த மாதம் 30-ந்தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் வேறு யாரும் மந்திரிகளாகப் பதவியேற்கவில்லை.
ஆனால் ஆந்திர அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஐந்து சமுதாயாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு, துணைமுதல்வர் பதவி வழங்க ஜெகன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதில் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜாவும் ஒருவர் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது. அதேசமயம் செவ்வாயன்று 25 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் ஆவார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர அரசில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.