புது தில்லி: சம்ஜெளதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2007ம் ஆண்டு சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பில் தனது சகோதரன் மற்றும் அவரது குடும்பத்தினரை இழந்த மொஹம்மது ஜாவித் கடந்த 12 ஆண்டுகளாகக் காத்திருந்தும் நியாயம் கிடைக்கவில்லை, 4 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இன்னமும் வெளியே தான் இருக்கிறார்கள். இது சரியான தீர்ப்பு அல்ல என்று 37 வயதான நபர் தொலைபேசி வாயிலாக தனது கருத்தைத் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவு கூறும் ஜாவித், சம்ஜௌதா ரயிலில் இரவு நேரத்தில் குண்டு வெடித்தது. ஆனால் எங்களுக்கு காலையில்தான் தெரிய வந்தது.
எனது சகோதரன் குழந்தையாக இருக்கும் போதே பாகிஸ்தானில் உள்ள எங்களது உறவினருடன் அவரை அனுப்பிவிட்டோம். அங்கேயே வளர்ந்து திருமணம் செய்து கொண்ட அவர் இந்தியா வந்து குடும்பத்தோடு இருக்க விரும்பினார். கடைசியாக எனது தந்தை இறப்புக்குத்தான் அவர் குடும்பத்தோடு வந்து தங்கியிருந்தார். ஒரு சில மாதம் எனது தாய் மற்றும் குடும்பத்தோடு தங்கியிருந்துவிட்டு பாகிஸ்தான் உறவினர்களுடன் அந்நாட்டுக்கு திரும்பிச் செல்லும் போதுதான் குண்டு வெடிப்பில் அவரும், குடும்பத்தினரும் உயிரிழந்துவிட்டனர்.
இது மட்டுமல்லாமல், எங்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் இழப்பீடும் கிடைக்கவில்லை. அவரது மரபணுவுடன் எனது மரபணு ஒத்துப்போகவில்லை என்று கூறி இழப்பீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் முதல் ரயில்வே தீர்ப்பாயம் வரை எங்கு சென்றும் நியாயம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அடாரி நோக்கி சென்று கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் பாகிஸ்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக்,
சம்ஜெளதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் செளஹான், ராஜிந்தர் செளத்ரி ஆகிய நான்கு பேரையும் விடுவித்து பஞ்ச்குலா என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பளித்தார்.
அதற்கு முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பெண் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் என்றார் அவர்.
தில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் சம்ஜெளதா அதிவிரைவு ரயிலில் கடந்த 2007-ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
ஹரியாணாவின் பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கை விசாரித்து வந்த ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இறுதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது.
இதனிடையே, குண்டு வெடிப்பில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது வகீலின் மகள் ரஹீலா வகீல், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்றும், விசா வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
அதையடுத்து, வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீப் சிங் நேற்று தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.