ஒடிஸாவில் புயல் சேதங்களை பார்வையிட்டார் மோடி: கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு
ஃபானி புயல் புரட்டிப் போட்ட ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
புவனேஸ்வர்: ஃபானி புயல் புரட்டிப் போட்ட ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
ஃபானி புயல் தாக்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பல லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றதற்காக நவீன் பட்நாயக் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, ஒடிஸாவில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்நாயக் தலைமையிலான அரசு மிகச் சிறப்பான முன்னெச்சரிக்கை பணிகளை செய்துள்ளது. இதனால் உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.
விரைவில் மத்தியக் குழு ஒடிஸாவுக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இதுபோன்ற மோசமான காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.