இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடையவர்களை தண்டித்தது மோடி அரசு

DIN

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளித்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
 பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
 கடந்த 1984-இல் நிகழ்த்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசினார். யாரும் தண்டிக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மன்னிப்பு கேட்பதற்காக, காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது.
 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாம் பிட்ரோடாவிடம் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "1984-இல் நடந்த சம்பவத்துக்கு இப்போது என்ன?' என்று அவர் பதிலளித்திருந்தார். அவரது பதில், காங்கிரஸ் கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது.
 மத்தியில் சில முறை காங்கிரஸ் கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தாலும், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்தக் கலவரத்தில் தொடர்புடையவர்களுக்கு தற்போதைய மோடி தலைமையிலான அரசுதான் தண்டனை பெற்றுத் தந்தது.
 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சாத்வி பிரக்யா சிங் தாக்குரை, போபால் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்ததால் சர்ச்சை எழுந்தது. அந்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெவ்வேறு நீதிமன்றங்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டன. வாக்கு வங்கி அரசியலுக்காக போலி ஹிந்து பயங்கரவாதத்தை காங்கிரஸ் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது.
 கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் கூடுதலான தொகுதிகளில் இந்த முறை பாஜக வெற்றி பெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT