மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதற்கு வாழ்த்துகளை வாரி வழங்கிய உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களுக்கு வெள்ளிக்கிழமை சுட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை செய்தியில். "வாழ்த்துகள் தெரிவித்த துணை அதிபருக்கு நன்றி. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், வளங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் அமெரிக்காவுடனான உறவை நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்' என்று மோடி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அனுப்பிய சுட்டுரை செய்தியில், " வாழ்த்துகளை வழங்கிய ரஷிய அதிபரும், எனது அருமை நண்பருமான புதினுக்கு நன்றி.
உங்களது ஆதரவுடன் நமது உறவில் அடையவுள்ள புதிய உச்சங்கள் விலைமதிப்பற்றவை. நமது சந்திப்பை மிக விரைவில் எதிர்பார்த்துள்ளேன்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, நைஜீரிய அதிபர் முகமது புகாரி, சவுதி அரேபிய அரசர் சல்மான், ஜிம்பாப்வே அதிபர் எமர்ஸன் தம்புúஸா நங்கக்வா உள்ளிட்ட வாழ்த்துகள் தெரிவித்த பல நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியினை வெள்ளிக்கிழமை
தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களை தவிர, பாலிவுட் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரவீனா டாண்டன், ஆர். மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், குத்துச் சண்டை வீரர் மேரி கோம், தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோரின் வாழ்த்துகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.