இந்தியா

தந்தை பாதியில் விட்டதை கையில் எடுத்த ஜெகன் மோகன் ரெட்டி!

DIN

தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்கள், செய்தித்தாள்கள், தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசாணையை ஆந்திர அரசு பிறப்பித்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆன நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன். இதன் தொடர்ச்சியாக தற்போது ஊடகங்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதன்படி, அரசுக்கு எதிராக தவறான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான செய்திகளை வெளியிடும் நாளேடுகள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2007ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்தபோது, இந்த சட்டத்தை முதல்முறையாக கொண்டு வந்தார். அச்சு மற்றும் மின்னணு ஊடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்டம் இருந்தது. ஆனால், அப்போது பத்திரிகைகளின் எதிர்ப்பு வலுக்கவே, பாதியிலே கைவிடப்பட்டது. 

இதையடுத்து, தந்தையின் ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட சட்டத்தை திருத்தி ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஆணை பிறப்பித்துள்ளார். அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடும் தனி நபர் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோன்று முன்னதாக, தகவல் துறை ஆணையர்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சம்மந்தப்பட்ட துறையின் செயலர்கள் கூட நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் மூலமாகவும் சம்மந்தப்பட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சட்டத்தில் இடம் உள்ளது. 

சில சமூக ஊடகங்கள் வேண்டுமென்றே அரசாங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றன; இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்; இதன் காரணமாகவே அத்தகைய ஊடகங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தகவல் ஆணையர் விஜய் குமார் ரெட்டி தெரிவித்தார். 

ஆனால், ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT