முகப்பு
இந்தியா

உடல் பருமன், எடை குறைவு: ஊத்தாப்பம் முதல் உப்புமா வரை யூனிசெஃப் சொல்லும் அறிவுரை!

இந்தியாவில் உடல் பருமன், எடை குறைவு, சத்துக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எந்தவிதமான உணவுகளை வழங்கலாம் என்று யுனிசெஃப் நிறுவனம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:11 PM
uppuma
பகிர்:


இந்தியாவில் உடல் பருமன், எடை குறைவு, சத்துக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எந்தவிதமான உணவுகளை வழங்கலாம் என்று யுனிசெஃப் நிறுவனம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அதில் ஊத்தாப்பம் முதல் முளைகட்டிய பயிறு வரை இந்தியாவின் மிகச் சிறந்த சத்துணவுகள் இடம்பெற்றுள்ளன.

உடல் பருமன், எடை குறைவு, சத்துக் குறைவு என உடல் எடை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ரூ.20 மதிப்புக்குள் சில உணவுகளை பரிந்துரை செய்திருக்கிறது அந்த புத்தகம். 2016 - 18ம் ஆண்டு ஒன்றிணைக்கப்பட்ட தேசிய சத்துணவு ஆய்வின் அடிப்படையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 35 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலும், 17 சதவீத குழந்தைகள் உணவை வீணடிப்பவர்களாகவும், 33 சதவீத குழந்தைகள் உடல் எடை குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40 சதவீத வளர்இளம் பெண்களும், 18 சதவீத வளர்இளம் சிறார்களும் சத்துப்பற்றாக்குறையோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறு வயதில் காணப்படும் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை வளர் இளம் பருவத்திலேயே உருவாக்கிவிடுவதாகவும் எச்சரிக்கிறது.

28 பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகத்தில் புதிதாக சமைத்த உணவுகள் மற்றும் அதனைத் தயாரிக்க ஆகும் செலவு என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

முதலில் உடல் எடை குறைவு சிறார்களுக்கான உணவுகளைப் பார்க்கலாம். உருளைக் கிழங்கு சேர்த்த பரோட்டா, பன்னீர் ரோல், ஜவ்வரிசி கட்லட் போன்றவற்றைக் கொடுக்கலாம். 

உடல் பருமனுக்கு.. முளைக் கட்டியப் பயிறு, அவலில் செய்த உணவு, காய்கறி உப்புமா ஆகியவற்றை சாப்பிட வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலோரிகளை எல்லாம் தாண்டி புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்புச் சத்து, விட்டமின் சி, கால்சியம் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள்தான் மிகவும் முக்கியம். அது பற்றி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளிகளிலும் இது பற்றி பாடங்களை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.