செல்லிடப்பேசியில் டிக்டாக் செயலியின் மூலம் சிறுவர் முதல் முதியவர் வரை தங்களுக்கு தெரிந்த பாடல், ஆடல் என்று பல விநோதங்களை படம்பிடித்து பதிவேற்றி வருகின்றனர். சமூக ஊடக மோகத்தின் காரணமாக சிலர் இதில் அடுத்தகட்ட விபரீதம் வரை அவ்வப்போது செல்வதும் உண்டு.
இதுபோன்று எல்லை மீறி செய்யும் சில விடியோப் பதிவுகளின் மீது அவ்வப்போது தக்க விளைவுகளை சந்திக்க நேரிடுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில், டிக்டாக் மோகத்தில் துப்பாக்கியுடன் பைக் ஓட்டிய இருவரை போலீஸார் கவனித்துப் பிடித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
டிக்டாக் செயலியில் இந்த விடியோப் பதிவைக் கவனித்த போலீஸார் உடனடியாக அதில் இடம்பெற்றிருந்த மண்ட்ஸூர் மாவட்டத்தின் மல்கர்ஹர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் கன்னையா ஆகிய இரு இளைஞர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து அந்த இளைஞர்கள் கூறியதாவது, எங்கள் டிக்டாக் பதிவுக்கு அதிக லைக்குள் மற்றும் கமெண்ட்கள் பெற்று பிரபலமடைய வேண்டும் என்ற விருப்பத்தில் இவ்வாறு செய்தோம். அந்த துப்பாக்கியை ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கினோம் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர்.