மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெற்றது எப்போது தெரியுமா?
மகாராஷ்டிராவில் பாஜக - தேசிய வாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி அரசு இன்று காலை பதவியேற்றுக் கொண்டது. இதற்கு முன்னதாக, காலை 5.47 மணியளவில், மகாராஷ்டிராவில் பிறப்பிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி தி
புது தில்லி: மகாராஷ்டிராவில் பாஜக - தேசிய வாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி அரசு இன்று காலை பதவியேற்றுக் கொண்டது. இதற்கு முன்னதாக, காலை 5.47 மணியளவில், மகாராஷ்டிராவில் பிறப்பிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.
மகாராஷ்டிராவில் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக ராம் நாத் கோவிந்த் கையெழுத்திட்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 12ம் தேதி பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி நவம்பர் 23ம் தேதி திரும்பப் பெறப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டதை அடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் ஆன பிறகும் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாததால், நவம்பர் 12ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.