165 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எங்களிடம் உள்ளது: சஞ்சய் ரௌத்
சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
சரத் பவார் ஒரு தேசியத் தலைவர். பாஜக அரசு அமைக்க முயன்றால் அது நடக்காது. இது பாஜக மற்றும் அஜித் பவார் எடுத்த தவறான முடிவாகும். சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
அஜித் பவார் தனது வாழ்க்கையில் மிகவும் தவறான செயலைச் செய்துள்ளார், இந்த வயதில் சரத் பவாரின் முதுகில் குத்திவிட்டார். ஆட்சியமைப்பதற்காக ஆளுநரிடம் அஜித் பவார் தவறான ஆவணங்களை சமர்பித்துள்ளார். மேலும் ஆளுநரும் அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியை இப்போது ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தாலும், அதற்கு தேவையான போதிய பெரும்பான்மை எங்களிடம் உள்ளது, அதை நிரூபிக்கவும் தயாராக உள்ளோம். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 49 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் உள்ளனர்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் போலீஸ் ஆகிய 4 முக்கிய கட்சியினர் தான் பாஜக-வுடன் உள்ளனர். தற்போது ஆளுநரும் பாஜக உறுப்பினராகியுள்ளார். இருப்பினும் பாஜக தனது சொந்தக் குழியிலேயே சிக்கிக்கொண்டுள்ளது. இது பாஜக முடிவின் தொடக்கமாகும் என்று தெரிவித்தார்.