முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:16 PM
maharashtra assembly
பகிர்:


புது தில்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக - அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றுக் கொண்டதை எதிர்த்து சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் பட்னவீஸுக்கு பெரும்பான்மை இருப்பது சந்தேகமே என கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், முழு பெரும்பான்மையுடன்தான் ஆட்சி அமைத்துள்ளதாக வாதிட்டார்.
 
அதற்கு பெரும்பான்மை இருக்கிறதென்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்குரைஞர் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்ற பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். அது எப்போது என்பதைத்தான் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

இதற்கு உச்ச நீதிமன்றம், 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை  நிரூபிப்பது குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.

இதற்கு நீதிபதி கூறுகையில், இதுபோன்ற வழக்குகளில் 24 அல்லது 48 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.

அவசர அவசரமாக ஆட்சியமைத்த பட்னவீஸ், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம்  கோருவதில் உள்நோக்கம் உள்ளது. 54 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறிய அஜித் பவார் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார், 54 எம்எல்ஏக்களும் தாங்கள் பாஜகவை ஆதரிப்பதாகக் கூறிய கையெழுத்திட்டுள்ளனர் என கபில் சிபல் வாதிட்டார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →