மகாராஷ்டிராவில் சட்டத்திற்கு புறம்பாக பாஜக ஆட்சி அமைத்துள்ளதாகக் கூறி, அரசியலமைப்பு தினமான இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 70வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் அரசியலமைப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததோடு, அரசியலமைப்பு தினத்தில் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் சட்டத்திற்கு புறம்பாக, ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக ஆட்சி அமைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் 'Stop murder of democracy' என்ற பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் திமுக, ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.