இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்களாக தாங்கள் மட்டும் தான் இருப்பதாக காங்கிரஸ் சுயப்பிரகடனம் செய்ய வேண்டாம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிவந்தி மேற்கு தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓவைஸி, திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது பேசியதாவது,
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு காங்கிரஸ் ஒன்றும் காரணமல்ல. அதுமட்டுமல்லாமல் இங்கு முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்களாக தாங்கள் மட்டும் தான் இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சி சுயப்பிரகடனம் செய்ய வேண்டாம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு நாட்டின் அரசியலமைப்பும், அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை சக்தியும் தான் காரணம் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களுக்கான பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் போட்டியிடுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.