ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? பாரத ரத்னா கோரிக்கை குறித்து பொங்கிய காங்கிரஸ்
ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாஜகவின் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸின் மூத்த சிந்தனையாளர்களில் ஒருவரான வீர் சாவர்க்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஏன் சாவர்க்கருக்கு மட்டும்? கோட்ஸேவுக்கு இல்லை? என்று பாரத ரத்னா விருது கோரிக்கை குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி வியாழனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
தேசிய ஜனநாயக முன்னணி / பாஜக அரசு பாரத ரத்னா விருதை ஏன் சாவர்க்கருக்கு மட்டும் அளிக்க நினைக்கிறது? ஏன் கோட்ஸேவுக்கு இல்லை? சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கோட்ஸேவோ குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடவும் செய்யப்பட்டுள்ளார்.
காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தில் அவரது நினைவுகளை மாசுபடுத்த விரும்பினால் அதை முழுவதுமாக செய்து விடுங்கள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.