பணமோசடி வழக்கில் கைதான கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் மீது வருமானவரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அவரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இன்று திஹார் சிறையில், டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, கர்நாடகாவின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
அப்போது சோனியா பேசும்போது, 'கட்சியின் இரண்டு மூத்தத் தலைவர்கள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக அரசு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களை குறிவைத்துள்ளது. இதில் போராடி, விரைவில் இதில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும். நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
சோனியா சந்தித்து சில மணி நேரங்களிலேயே டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, சில தினங்களுக்கு முன்பாக திஹார் சிறையில் சிவகுமாரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.