முகப்பு
இந்தியா

'எனது அம்மாவை பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது' - மெஹபூபா முப்தியின் மகள்; சந்திப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, பாதுகாப்பு கருதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனது தாயை சந்தித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. எனவே, உடனடியாக ஸ்ரீநகருக்குச் சென்று தாயாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்' என்று இல்திஜா தனது மனுவில் கூறியிருந்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் இதனை கடுமையாக எதிர்த்தார். தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்றால் இல்திஜா, முதலில் மாவட்ட நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். 

ஆனால், உச்ச நீதிமன்றம் இதை மறுத்ததுடன்,  சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று இல்திஜா, ஸ்ரீநகருக்கு சென்று தனது தாயாரை சந்திக்கலாம் என்றும் அவர் விருப்பப்படும் தேதியில் சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிவித்தது.

இல்திஜா தற்போது சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.