புது தில்லி: இ- சிகரெட்டுக்குத் தடை என்பது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு? என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வரும் இ- சிகரெட்டுகள் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இ- சிகரெட்டுகளுக்கான உற்பத்தி, ஏற்றுமதி & இறக்குமதி, சேமித்து வைத்திருப்பது, விளம்பரம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதனன்று வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டில் இ- சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலுக்கு வரும். குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
தடையை மீறி இ - சிகரெட்டுகளை தயாரித்தலோ, விற்பனை செய்தாலோ தனிநபர் என்றால் 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்யும் பட்சத்தில் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும்' என்றார்.
இந்நிலையில் இ- சிகரெட்டுக்குத் தடை என்பது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு? என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், 'மற்ற புகையிலைப் பொருட்களுக்கு தடையில்லாதபோது, அதிக வரிவிதிக்க முடியும் என்ற சூழலில் இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது. ஆரோக்கியம் மற்றும் நிதி அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனும் போது எந்த அடிப்படையில் ஏடுக்கப்பட்டது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.