நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நுகர்வு அதிகரித்து, கடன் வழங்கும் நடவடிக்கைகளை வங்கிகள் அதிகரிக்கவுள்ளதால், பொருளாதாரம் முன்னேறத் தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கி நிர்வாகிகளைச் சந்தித்த சில வாரங்களுக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் வழங்கும் தனியார் துறையினர் மற்றும் நிதி நிறுவனங்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
"அவர்கள் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. கடன் வழங்குவதற்கானப் போதிய தேவை உள்ளதாகவே அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக, இந்த சந்திப்பு ஒரு டானிக் போல் இருந்தது. இந்த சந்திப்பில் நிறைய நல்ல விஷயங்களையும், நேர்மறையான விஷயங்களையும் நான் அவர்களிடம் கேட்டேன். எனக்கு கிடைத்த தகவல், இங்கு நுகர்வு நடைபெறுகிறது.
பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. வரவிருக்கும் பண்டிகை காலங்கள், பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் படிக்க: தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சி: மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்தது அசோக் லேலண்ட்
வணிக வாகன விற்பனையின் சரிவு, சுழற்சி முறையில் இயல்பாக நடைபெறுவதுதான் என்றும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளில் இது முன்னேற்றம் காணும் என்றும் தனியார் துறை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தெரிவித்தன. பயணிகள் வாகன விற்பனையில் நிலவும் மந்தநிலை, உணர்வுகளால் இயக்கப்படுகிறது என்றும் எதிர்காலத்தில் இது மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான 5 சதவீதமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.