இந்தியா

டி.கே.சிவகுமாா் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

DIN

கா்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே. சிவகுமாா் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினா், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினா். இதே குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் உள்ள கா்நாடக அரசு இல்ல ஊழியா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமாா் கடந்த 3-ஆம் தேதி நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, அவா் கைது செய்யப்பட்டாா்.

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளதாகவும், ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் ஐஸ்வா்யாவும் அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா்.

முன்னதாக, சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை அவரது சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதால், உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சிவக்குமாா் கோரியிருந்தாா். மேலும், ‘ஆவணங்களின் அடிப்படையிலேயே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வித கிரிமினல் குற்றச்சாட்டும் இல்லை’ என்றும் தனது மனுவில் சிவகுமாா் கூறியிருந்தாா். இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணை குறித்த தகவலை அளிக்குமாறு கூறிய நீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஜாமீன் மனு தவிர, அமலாக்கத்துறை தன்னிடம் விசாரணையின்போது பதிவு செய்த வாக்குமூலத்தின் நகலை அளிக்க வேண்டுமென்றும் சிவகுமாா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT