ஹைதராபாத்: கரோனா அச்சம் காரணமாக தெலங்கானாவில் விவசாயி ஒருவர் வெள்ளாடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 6771 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 228 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக தெலங்கானாவில் விவசாயி ஒருவர் வெள்ளாடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெருவஞ்சா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். இவர்தான் கரோனா அச்சத்தில் தான் வளர்க்கும் 20 வெள்ளாடுகளுக்கும் முகக்கவசம் அணிவிதுள்ளார்.
இதுதொடர்பாக செயதி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரோன்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதைப் பற்றி கடந்தவாரம் செய்தித்தாளில் படித்தபிறகே, நான் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிறேன். எனது ஆடுகளின் முகவாயில் நான் முகக்கவசங்களை மாட்டி விட்டுள்ளேன். நான் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை.
நானும் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் செல்லும் போது முகக்கவசம் அணிந்துதான் செல்கிறேன். அவை காட்டின் உள்பகுதியை அடைந்தவுடன் கவசங்களை நீக்கி மேய வழி செய்கிறேன். மாலையில் திரும்பும்போது கவசங்களை திரும்பவும் அணிவித்து விடுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.