உத்தரப் பிரதேசம்: சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே..
ஷாஜகான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரகுநாத்பூர் கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், அந்த பெண்ணின் கணவர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்னாபூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்த தம்பதியினர் கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் வரை பயணம் செய்து சிக்கந்தர்பூர் கிராசிங் அருகே வந்தபோது, அந்த பெண்ணிற்குப் பிரசவ வலி அதிகரித்தது. சாலையிலேயே அந்த பெண் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாக அக்கிராமத்தின் தலைமைக் காவலர் அபர்ணா கௌதம் தெரிவித்துள்ளார்.
கிராமத்தின் அருகில் வயலில் வேலைச் செய்யும் தோமர் என்ற பெண் அந்த பெண்ணிற்கு உதவி செய்துள்ளார். பின்னர், காவல் பாதுகாப்பு வாகனத்தின் மூலம் அந்த பெண்ணை சுகாதார மையத்திற்குக் கொண்டுபோய் சேர்த்தனர். தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி வழங்கப்பட்டு, தற்போது இருவரும் நலமாக உள்ளதாகத் தலைமைக் காவலர் தெரிவித்தார்.
பெண்ணிற்கு உதவிசெய்த தோமருக்கு பாராட்டுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.