முதல் போட்டியிலேயே சொதப்பிய சிஎஸ்கே; பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.
பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான்; சொதப்பிய சிஎஸ்கே!
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிஎஸ்கேவில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதன் பின், ஆயுஷ் மாத்ரே 0 ரன், மேத்யூ ஷார்ட் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இம்பாக்ட் வீரர் சர்ஃபராஸ் கான் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். இருப்பினும், சர்ஃபராஸ் கான் 17 ரன்களிலும், கார்த்திக் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 6 ரன்கள், நூர் அகமது ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ஜேமி ஓவர்டான் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் நண்ட்ரே பர்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ப்ரிஜேஷ் சர்மா, சந்தீப் சர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.