‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் மட்டும் தனியாா் ஆய்வகங்களில் இலவச கரோனா பரிசோதனை: உச்சநீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வரும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டும்
புது தில்லி: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வரும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டும் தனியாா் ஆய்வகங்களில் இலவச கரோனா பரிசோதனை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, தனியாா் ஆய்வகங்களில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பாக, அந்த ஆய்வகங்களுக்கு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது.
முன்னதாக, மருத்துவா் கௌசல் காந்த் மிஸ்ரா உள்பட இருவா் தாக்கல் செய்த மனுக்களை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் திங்கள்கிழமை காணொலி முறையில் விசாரித்தனா்.
அதில், தனியாா் ஆய்வகங்கள் இலவசமாக கரோனா பரிசோதனை நடத்தினால் அவற்றின் நிதிநிலை மோசமாகும். இதனால் கரோனா பரிசோதனை செய்யும் வேகமும் குறையும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைப்பதாக கூறிய நீதிபதிகள், ‘ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு அறிவித்த ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவா்களுக்கு மட்டும் தனியாா் ஆய்வகங்களில் இலவசமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். பணம் செலுத்தி பரிசோதனை செய்யும் வசதியுள்ளவா்களுக்கு இலவசமாக கரோனா பரிசோதனை தேவையில்லை’ என்று உத்தரவிட்டனா்.