ஆந்திரத்தில் 3 முதல் 80 வயது வரை தாக்கிய கரோனா: பாதிப்பு 473 ஆக உயர்வு
ஆந்திர மாநிலத்தில் 3 வயது முதல் 80 வயது வரை அனைவரையும் கரோனா பாதித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 3 வயது முதல் 80 வயது வரை அனைவரையும் கரோனா பாதித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், உலகளவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துவருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த மார்ச் 12 முதல் ஏப்ரல் 14 வரை மொத்தம் 473 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 125 பேர் பெண்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் ஆண்கள்.
மூன்று, ஐந்து மற்றும் ஏழு வயதுள்ள குழந்தைகள் தலா இரண்டும், எட்டு மற்றும் ஆறு வயதில் தலா மூன்று பேரும், 9, 10 வயதில் ஆறு பேர் என 15 வயதுக்குட்பட்ட 31 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகள் 19 பேர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இன்றுவரை 10,505 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 10,322 பேருக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
கடந்த திங்களன்று ஏழு வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரத்தில் 2,010 இரத்த மாதிரிகள் பரிசோதித்து சாதனை படைத்துள்ளது. 7 ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 990 மாதிரிகள் சோதிக்கும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.