ஊரடங்கில் உருப்படியாக ஒரு வேலை: வீட்டுக்கு வெளியே கிணறு தோண்டிய மகாராஷ்டிர தம்பதி
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல், பலரும் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
வாஷிம்: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல், பலரும் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
விளையாடுவது, பொழுதுபோக்குவது என்று எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருப்பது என்றும், வேறு என்னதான் செய்ய முடியும் என்றும் அங்கலாய்ப்பவர்களுக்கு இதோ ஒரு சிறந்த உதாரணம்.
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் கார்கேடா கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான கஜானன் பக்மோடும் அவரது மனைவி புஷ்பாவும், ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் சிறிது சிறிதாக தங்களது வீட்டுக்கு வெளியே ஒரு கிணறைத் தோண்டத் தொடங்கினர்.
21வது நாள் முடிவில் 25 அடி ஆழமுள்ள அழகியக் கிணறு தயாராகிவிட்டது. ஊரடங்கு தொடங்கியதுமே வீட்டுக்கு வெளியே ஒரு மூலையில் சிறிய பூஜை போட்டு, கிணறு தோண்டத் தொடங்கினோம். இருவருமே தினமும் இந்த வேலையை ஒன்றாக ஈடுபாட்டுடன் செய்தோம். அதில் இருந்து தண்ணீர் ஊற்று வருவதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆனந்தம் பொங்கியது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாங்கள் இந்த வேலையை செய்யத் தொடங்கும் போது அக்கம் பக்கத்தினர் எங்களை கேலி பேசினர். ஆனால் அதை எல்லாம் நாங்கள் கருத்தில் கொள்ளாமல் எங்கள் வேலையிலேயே கவனமாக இருந்தோம்.
கோடை தொடங்கியதுமே குடிநீர் திட்டங்கள் எல்லாம் முடங்கிவிடும். எனவே தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கிணறு மட்டுமே ஒரே வழி என்று நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம். இன்று நல்ல வழியும் கிடைத்து விட்டது என்கிறார்கள் தம்பதியர் ஒருமித்த குரலில்.