கரோனா பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் அனைத்து மாநில அரசுகளின் பங்கு மகத்தானது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை.
ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷாக்காரர்கள் போன்றோரின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம். இந்த காலகட்டத்தில் உயிர்கள், உணர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம்.
நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது. சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை.
கரோனா தடுப்புப் பணிகளில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த நேரத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். தேவையானவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை கொடுத்து அனைவரும் உதவ வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக நாம் கரோனாவில் இருந்து தப்பிக்கலாம்.
ரம்ஜான் முடிவதற்குள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும்.
கரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.