கர்நாடகத்தின் கலாபுராகியில் 144 தடை உத்தரவு: அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை எதிரொலி
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நடத்தப்படும் பூமி பூஜையை அடுத்து, கர்நாடகாவின் கலாபுராகி நகரில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நடத்தப்படும் பூமி பூஜையை அடுத்து, கர்நாடகாவின் கலாபுராகி நகரில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் புதன்கிழமை ராமர் கோவிலுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தின் நடுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். லக்னோவை அடைந்த பிறகு, அங்கிருந்து 125 கி.மீ தூரத்தில் உள்ள அயோத்தியாவுக்கு செல்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியையொட்டி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் கலாபுராகியில் ஆகஸ்ட் 4 முதல் 6ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடைஉத்தரவு ஆகஸ்ட் 4, மாலை 3 மணி முதல் ஆகஸ்ட் 6 காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று கலாபுராகி நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.