காருக்குள் சிக்கி வெளியேற முடியாமல் இறந்த மூன்று குழந்தைகள்: ஆந்திரத்தில் சோகம்
ஆந்திராவில் காரில் சிக்கிய மூன்று குழந்தைகள் வெளியேற முடியாமல் மூச்சித் திணறலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் காரில் சிக்கிய மூன்று குழந்தைகள் வெளியேற முடியாமல் மூச்சித் திணறலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தின் ரெமல்லே கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் வெளியேற முடியாமல் மூச்சுத் திணறால் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் மூவரும் 6 வயதுக்குட்பட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெமல்லே கிராமத்தில் தொழிலாளர் குடியிருப்பில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாட்டாக சென்றுள்ளனர்.
அப்போது தற்செயலாக காரின் கதவுகள் பூட்டிக் கொண்டதால் குழந்தைகள் பதற்றமடைந்தனர். கதவுகளை திறக்க முடியாத குழந்தைகள் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க கத்தியுள்ளதாக தெரிகிறது. கதவு பூட்டியிருந்ததால் அவர்களின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. பின் குழந்தைகள் காணமால் போனதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களை தேடத் துவங்கியுள்ளனர்.
சுமார் ஒரு மணிநேர தேடலுக்குப் பிறகு காரில் மயக்கத்தில் கிடந்த குழந்தைகளை கண்டறிந்த பெற்றோர்கள், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். காருக்குள் சிக்கி குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019 மே மாதம் விசாகப்பட்டிணத்தில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில், ஏழு வயது சிறுவன் தற்செயலாக காரில் பூட்டப்பட்டதால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.