ஹிமாசலில் வாகனத்தின் மீது பாறை சரிந்து விபத்து: 2 பேர் பலி
ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனங்கள் மீது பாறை சரிந்து விழுந்த விபத்தில் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிம்லா: ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனங்கள் மீது பாறை சரிந்து விழுந்த விபத்தில் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஹாங்கோய் கோயில் அருகே உள்ள சண்டிகர் - மணலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தன. கடந்த சில தினங்களாக ஹிமாசலில் தொடர் மழை பெய்து வருவதால், மண் ஈரப்பதம் காரணமாக மேடான பகுதியில் இருந்த பாறை சரிந்து சாலையில் விழுந்தது. இதில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்து வாகனத்தில் இருந்த ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது, மழை ஈரப்பதம் காரணமாக அதிகாலை 5 மணியளவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. அதில் இரண்டு வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. வாகனத்தில் இருந்த 2 ஓட்டுநர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பாறை சரிவின் காரணமாக 4 முறை விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.