முகப்பு
இந்தியா

27% சிபிஎஸ்இ மாணவர்களிடம் செல்லிடப்பேசி இல்லை: என்சிஇஆர்டி

நாட்டில் சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் பயிலும் 27% மாணவர்களிடம், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் செல்லிடப்பேசியோ, மடிக்கணிணி வசதியோ இல்லை என்று எச்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
சிபிஎஸ்இ-யில் பயிலும் 27% மாணவர்களிடம் செல்லிடப்பேசி வசதி இல்லை: என்சிஇஆர்டி
பகிர்:


புது தில்லி: நாட்டில் சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் பயிலும் 27% மாணவர்களிடம், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் செல்லிடப்பேசியோ, மடிக்கணிணி வசதியோ இல்லை என்று எச்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கல்விக்கு மின் தடை பெரும் இடையூறாக இருப்பதாக 28% மாணவர்கள் மற்றும் பெற்றோர் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சுமார் 34 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல ஆசிரியர்களுக்கு, செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்திருக்காததும், இடையூறாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற பாதி மாணவர்களுக்கு இதுவரை பள்ளிப் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. அதே சமயம், என்சிஇஆர்டியின் இணையதளம் மற்றும் டிஐகேஎஸ்எச்ஏ என்ற செயலியிலும் இ-புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அது பற்றி பல மாணவர்கள் தெரிந்திருக்கவில்லை என்றும், அதனைப் பயன்படுத்துவதற்கான இணைய வசதியும், செல்லிடப்பேசியும் இல்லாததும் ஒரு பெரிய சிக்கலாக இன்னமும் நீடிக்கிறது.

ஆசிரியர்களிடம் பல சந்தேகங்களை எழுப்பி கற்றுக் கொள்ளும் கணிதப் பாடத்தை கற்றறிவது, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அடுத்து அறிவியல் பாடமும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்சிஇஆர்டி நடத்திய ஆய்வின் அடிப்படையில், தொழில்நுட்ப வசதி இல்லாத மாணவர்களின் கல்வித் திறனை வளர்க்க தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் வாயிலாக கல்வி கற்பிக்கும் வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

அதன்படி, செல்லிடப்பேசி வசதியே இல்லாத மாணவர்கள், சிறிய அளவில் வசதி இருக்கும் மாணவர்கள், தொழில்நுட்ப வசதி இருக்கும் மாணவர்கள் என மூன்று வகைகளாக மாணவர்களைப் பிரித்து, அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →