மகாராஷ்டிரத்தில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விபத்து: ராகுல் இரங்கல்
மகாராஷ்டிர குடியிருப்புக் கட்டட விபத்தில் உயிரிழந்தவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர குடியிருப்புக் கட்டட விபத்தில் உயிரிழந்தவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புரா என்னுமிடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுமார் 45 குடியிருப்புகள் கொண்ட இக்கட்டடம் திங்கள்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் 70 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மகாராஷ்டிர விபத்து குறித்து நான் வேதனை அடைகிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த மற்றும் விபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு மாநில அரசு விரைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீட்புப்பணிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்களும் உதவ வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.