இமாசலில் தொடர்கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு
இமாசலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இமாசலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் இமாசலில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் மண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டி - கல்லு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மேலும் மண்டி - கல்லு பகுதிகளுக்கு இடையிலான கட்டோலா மாற்றுப் பாதையிலும் நிலச்சரிவால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலையில் உள்ள மணற்சரிவுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.