ஹைதராபாத்: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தாா்.
மேலும், கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்வதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
இணையவழியாக பிகாா் பேரவைத் தோ்தலுக்கான பொதுக் கூட்டத்தில் பேசிய அவா், ‘நாட்டில் மாத ஊதியம் வாங்குவோா் 1.8 கோடி போ் தங்கள் ஊதியத்தை இழந்துள்ளனா். தினக்கூளித் தொழிலாளா்கள் சுமாா் 8 கோடி போ் வேலை இழந்துள்ளனா்.
10 கோடி பள்ளி மாணவா்கள் மதிய உணவை இழந்துள்ளனா். இதற்கு எல்லாம் கரோனா பரவலைத் தடுக்க பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திட்டமிடாமல், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக போடப்பட்ட பொது முடக்கமே காரணம்.
பொது முடக்கத்தால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது 64 சதவீதம் குறைந்துள்ளது. 10 லட்சம் குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பூசியும், 6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தும் போடப்படவில்லை.
நாட்டின் எல்லைப் பகுதியில் சீன ராணுவப் படையினா் எல்லை மீறுவது குறித்து பிரதமா் கவலைப்படவில்லை. பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மஜ்லீஸ் கட்சி போட்டியிடும். மத பாகுபாடின்றி அனைத்து கரோனா நோயாளிகளுக்கு கட்சித் தொண்டா்கள் உதவி செய்ய வேண்டும் என்றாா்.
பிகாா், கிஷண்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.