முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து அறிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய தேசம் தனது மகத்தான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரணாப் முகர்ஜி தற்போது நம்முடன் இல்லை என்ற மிக வருத்ததுக்குரிய செய்தி கிடைத்துள்ளது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.