ஹரியாணாவிலிருந்து 20 பேர் அடங்கிய விவசாயிகள் குழு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தனர்.
பத்மஸ்ரீ விருது வென்ற கமல் சிங் தலைமையிலான விவசாயிகள் முன்னேற்றம் குழு புதிய வேளாண் சட்டங்களில் சில திருத்தங்கள் மேற்கொண்டால் போதும் ரத்து செய்ய வேண்டியதில்லை என்று கருதி நரேந்திர சிங் தோமரைச் சந்தித்தனர்.
தாங்கள் தனிப்பட்ட விவசாயிகள் என்றும் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளின் பிரதிநிதிகள் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 12 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் விவசாயிகள் தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. போராட்டத்தின் பகுதியாக நாளை நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு விவசாயிகள் குழு அமைச்சர் தோமரைச் சந்தித்துள்ளது.