மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: அமித்ஷாவுடன் வேளாண் துறை அமைச்சர் ஆலோசனை
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் சந்தித்துப் பேசினார்.
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் சந்தித்துப் பேசினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும், திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் சந்தித்து பேசினார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.