புது தில்லி: இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தாத்தாவாகியுள்ளார்.
அவரது மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பையில் ஷ்லோகா - ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அம்பானி குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி (63) - மனைவி நீட்டாவுக்கு மூன்று பிள்ளைகள். 29 வயதாகும் ஆகாஷ், இஷா இருவரும் இரட்டையர்கள். ஆனந்த் (25) மூன்றாவது மகன். ஆகாஷ், ரஷ்ஷெல் மேத்தாவின் மகளான ஷ்லோகாவை கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி - நீதா தம்பதி முதல் முறையாக தாத்தா - பாட்டியாகியுள்ளனர். திருபாய் - கோகிலாபென் அம்பானிக்கு கொள்ளுப் பேரன் பிறந்திருப்பதால் முகேஷ் அம்பானி தம்பதி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குழந்தை பிறந்திருப்பதால் மேஹ்தா மற்றும் அம்பானி குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.