தில்லி நோக்கி மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள் தில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள் தில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, தில்லி நகரை இணைக்கும் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. தில்லிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடனான 5 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களில் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு அளித்த வரைவு முன்மொழிவையும் விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும், மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தில்லி நோக்கி மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலிருந்து தில்லி குண்ட்லி எல்லையை நோக்கி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் 700 டிராக்டர்களில் விவசாயிகள் புறப்பட்டுள்ளனர்.