வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும்: தேஜஸ்வி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:
"விவசாயிகள் பிச்சைக்காரர்கள் ஆவதைத் தடுக்க நாம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும். 2006-இல் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை நிதிஷ் குமார் அரசு ரத்து செய்தது. அதன் விளைவு, விவசாயிகளால் சந்தைகளைக் கண்டறிய முடியவில்லை. இதனால், இடைத்தரகர்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாகவே அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். வேளாண் சட்டங்களை நாம் எதிர்க்கவில்லையென்றால், அவர்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது நிலங்களைக் கையகப்படுத்திவிடும்.
2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ளது. உற்பத்தி செய்த பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லையென்றால், வருமானம் எப்படி இரட்டிப்பாக்கப்படும் என மோடி அரசைக் கேட்க விரும்புகிறேன். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டரீதியாக முறைப்படுத்த வேண்டும் என நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமாரை வலியுறுத்துகிறேன்.
விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அவர்களை பயங்கரவாதிகள், காலிஸ்தானிகள் என சித்தரிக்கின்றனர். தில்லி போராட்டத்தின்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கூட அவர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை. மத்திய அரசு மற்றும் பிகார் அரசிடமிருந்து ஒரு அறிக்கைகூட வெளிவரவில்லை. நமது விவசாயிகள் குறித்து ஒரு வார்த்தை பேசுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை.
பிகாரிலுள்ள 38 மாவட்ட தலைநகரங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏற்பாடு செய்துள்ளது. நமது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் போராடுவோம்."