'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம்'
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.
புணே: மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.
விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, மகாராஷ்டிரத்தின் புணே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:
நாட்டிலுள்ள விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் துணைநின்று வருகிறாா். மத்திய அரசு இயற்றியுள்ள புரட்சிகரமான வேளாண் சட்டங்கள், விளைபொருள்களை விற்பதற்கான கூடுதல் சுதந்திரத்தை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் விளைபொருள்களை விற்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் வா்த்தகா்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தால், விவசாயிகள் நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பை வேளாண் சட்டங்கள் வழங்கியுள்ளன. ஆனால், மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.
பொய்யான வாக்குறுதிகள் மூலமாக விவசாயிகளை, ஆளும் மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி (மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி) கூட்டணி (சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ்) ஏமாற்றி வருகிறது. விவசாயிகளுக்குப் பல்வேறு அநீதிகளை மாநில அரசு இழைத்து வருகிறது என்றாா் தேவேந்திர ஃபட்னவீஸ்.