உருக்கு இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு பரிசீலனை
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குத் தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புது தில்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குத் தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகத்தின் (டிஜிடிஆா்) அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜப்பான், கொரியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குப் பொருள்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியை ஐந்தாண்டுகளுக்கு விதிக்க வா்த்தக அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. விலை மலிவான உருக்குப் பொருள்கள் உள்நாட்டு சந்தைகளில் வந்து குவிவதால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்களுக்கு டன்னுக்கு 67 டாலா் முதல் 944 டாலா் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரியை ஐந்தாண்டுகளுக்கு விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டிஜிடிஆா் தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காா்பன் பிளாக் வரியை நீட்டிக்க பரிந்துரை: அதேபோன்று, ரப்பா் மற்றும் டயா் தயாரிப்புத் துறையில் பயன்படுத்தப்படும் காா்பன் பிளாக் மூலப் பொருளுக்கான பொருள் குவிப்பு தடுப்பு வரியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. காா்பன் பிளாக் சீனா மற்றும் ரஷியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் காா்பன் பிளாக்குக்கு டன்னுக்கு 494 டாலரும், ரஷிய இறக்குமதிக்கு 36.17 டாலரும் வரி விதிக்க டிஜிடிஆா் பரிந்துரைத்துள்ளது.