லக்னௌ: பிரிட்டனிலிருந்து ஒரு சில வாரத்துக்குள் இந்தியா திரும்பியவர்கள், தங்களது செல்லிடப்பேசிகளை அணைத்து வைத்திருப்பதால் அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் பெரும் சவாலை சந்தித்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 25-ம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து உத்தரப்பிரதேசம் திரும்பியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கையாக இந்தியா உள்பட பல நாடுகள் பிரிட்டனிலிருந்து விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அதோடு, பிரிட்டனிலிருந்து வந்தவர்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அதன்படி, விமானப் பயணத்தின் போது அவர்கள் கரோனா இல்லை என்று சான்றிதழ் வைத்திருந்தாலும் கூட, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், 10 நாள்கள் வரை அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை யாருக்கேனும் கரோனா கண்டறியப்பட்டால் அவர்களை தனிமை வார்டில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனிலிருந்து உத்தரப்பிரதேசம் திரும்பியவர்களை தொடர்பு கொள்ள சுகாதாரத் துறையினர் முயன்ற போது, அவர்களது செல்லிடப்பேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அப்படியே செல்லிடப்பேசிகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடிந்தாலும், யாரும் அழைப்பை எடுப்பதில்லை என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.