குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தில்லி போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவரை பாஜகவில் இணைந்தது சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் தலைநகர் தில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. போராட்டம் 49 நாள்களைக் கடந்த நிலையில் ஷாகின்பாக் போராட்டக் களத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் பின் பிணையில் வெளிவந்தார். விசாரணையில் அந்த நபர் நொய்டா எல்லை அருகே உள்ள தல்லுபுரா கிராமத்தை சேர்ந்த கபில் குஜ்ஜர் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் குஜ்ஜர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார். துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்ட நபரை பாஜக தனது கட்சியில் இணைத்துக் கொண்டது குறித்து விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், “அவர் துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” எனக் கூறி கட்சியில் சேர்த்த சில மணி நேரங்களிலேயே அவரை விடுவித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.