வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த கேரள பாஜக எம்.எல்.ஏ.
கேரள மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரானத் தீர்மானத்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரானத் தீர்மானத்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (டிச.31) காலை கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் கேரளத்தை கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும், மற்ற மாநிலங்கள் உணவுப் பொருள்களை நிறுத்தினால் கேரள மக்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை எனவும் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
ஆளும் இடதுசாரி கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்தது. தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ராஜகோபால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
ராஜகோபால் அவர்களின் ஆதரவு மாநில பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.