மோடி ஒரு பிரதமர் போல நடந்துகொள்ளவில்லை: டியூப் லைட் விமரிசனத்துக்கு ராகுல் பதிலடி
நரேந்திர மோடி ஒரு பிரதமரைப் போல நடந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புது தில்லி: நரேந்திர மோடி ஒரு பிரதமரைப் போல நடந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நிறைய டியூப் லைட்டுகள் இப்படித்தான் என்று ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.
பொதுவாகவே பிரதமர் என்றால் அவர்களுக்கு என ஒரு தனி அந்தஸ்து இருக்கும். பிரதமர் என்றால் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று ஒன்று இருக்கும். உயர்ந்த நிலை இருக்கும். ஆனால், நமது பிரதமருக்கு அதுபோன்ற எதுவும் இல்லை. அவர் ஒரு பிரதமர் போல நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறியுள்ளார்.
மக்களவையில். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை மறைமுகமாக டியூப் லைட் என்று விமரிசித்திருந்தார். இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு மேற்கண்ட பதிலை ராகுல் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்க மறுக்கிறார்கள். எங்களது குரல்வளை நசுப்படுகிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.