நீதிபதியின் மனைவி, மகனைக் கொன்ற காவலருக்கு தூக்கு தண்டனை
கடந்த 2018ம் ஆண்டு நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்ற காவலருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குர்கான்: கடந்த 2018ம் ஆண்டு நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்ற காவலருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குர்கானில், கூடுதல் அமர்வு நீதிபதி (ஏஎஸ்ஜே) கிரிஷண் காந்த்தின் மனைவி ரித்து (38), மகன் துருவ் (18) ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அர்காடியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அவர்களுக்கு பாதுகாப்புக்காகச் சென்ற காவலர் மஹிபால் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், குற்றவாளி மஹிபால் சிங்குக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுதிர் பர்மர் நேற்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி அளித்த தீரப்பில், பட்டப்பகலில், பாதுகாப்புக்காகச் சென்ற காவலரே, நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றிருப்பது மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம். அரசு ஊழியராக, அவர்களைப் பாதுகாப்பது காவலரின் கடமை. ஆனால், அதற்கு மாறாக, நம்பிக்கையை தகர்த்து, அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அரசு தரப்பு வழக்குரைஞர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அதே சமயம், குற்றவாளி மஹிபால் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், அவரது வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் மஹிபால். அவரை நம்பியே வயதான பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.