உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தில்லி முதல்வர் கேஜரிவால் சந்திப்பு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் முதல்வர் பதவியேற்கும் விழா பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடா்ந்து, கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், கோபால் ராய், இம்ரான் ஹுசேன், கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கவுதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனா். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதையடுத்து, முதல்வராக பதவியேற்று மூன்று நாட்களே ஆன நிலையில், கேஜரிவால் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அமித் ஷாவின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஏற்கனவே, மத்திய பாஜக அரசுடன் இணைந்து வளர்ச்சி மிக்க முதல் நகரமாக தில்லி மாற்றப்படும் என்றும் பிரதமர் மோடி, தில்லியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் கேஜரிவால் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேஜரிவால்-அமித் ஷா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.