36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?
மாற்று வீரராக சிஎஸ்கே எடுக்கவிருக்கும் இளம் அதிரடி வீரர் குறித்து...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 36 பந்துகளில் சதமடித்த இளம் வீரரான ஆயுஷ் வர்தக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் அடைந்துள்ளன. இந்த நிலையில், காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்களை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
முன்னதாக, ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக சிஎஸ்கே அணி ஆகாஷ் மத்வாலை எடுத்தது. தற்போது, கலீல் அகமதுக்குப் பதிலாக அதிரடியான ஆல்ரவுண்டரை எடுக்க திட்டமிட்டுள்ளது.
Advertisement
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 21 வயதான ஆயுஷ் வர்தக் யு23 மும்பை கேப்டனாக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஆடவர் மாநில ஏ கோப்பையில் 6 இன்னிங்ஸில் 363 ரன்கள் குவித்தார். இதில் 26 சிக்ஸர்கள் அடங்கும். சிகே நாயுடு கோப்பை 2024-25 சீசனில் 192 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 3 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்து கவனம் ஈர்த்தார்.
நவி மும்பை டி20 லீக்கில் 264 ரன்களை 191.30 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக சிறந்த யு-23 வீரர் என்ற விருதையும் பெற்றார்.இது குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் கூறியிருப்பதாவது:
ஆமாம், ஆயுஷ் வர்தக் திங்கள் கிழமை இரவு சென்னை வந்தார். செவ்வாய்க்கிழமை ட்ரையல்ஸுக்காக அழைக்கப்பட்டுள்ளார். வருங்காலத்துக்கான நல்ல அணியை உருவாக்கும் முனைப்பில் சிஎஸ்கே செயல்பட்டு வருகிறது.
அதிரடி பேட்டரான இவர் ஒரு போட்டியில் காலில் அடிப்பட்டி ரத்தம் சொட்ட சொட்ட விளையாடியுள்ளார். போட்டிக்குப் பிறகு 5 தையல் போடப்பட்டுள்ளது. அதிரடி மட்டுமில்லாமல் மன உறுதிக்கும் பெயர்போன இவரை சிஎஸ்கே அணி விரைவில் அணியில் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.